ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாலோ சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ரூபன் ஆறுமுகம், சென்ட்ரல் பாலோ மற்றும் சாமேக் பகுதிகளில் தங்களின் தேர்தல் கொடிகள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரச்சாரத்தின் மூன்றாவது நாளில் நடந்துள்ள இந்த வன்முறை, வாக்காளர்களையும் ஆதரவாளர்களையும் அச்சுறுத்தும் ஒரு மலிவான உத்தி என்றும், ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் சாடியுள்ளார். சம்பவ இடத்திற்கு மூத்த தலைவர் கஸ்தூரி பட்டுவுடன் நேரில் சென்று பார்வையிட்ட டாக்டர் ரூபன், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.
அரசியல் எதிர்ப்பாளர்கள் வன்முறையற்ற, நேர்மையான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய டாக்டர் ரூபன், ஆதரவாளர்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸ் துறையும், தேர்தல் ஆணையமான எஸ்பிஆர்ரும் உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் ரூபன் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.











