ஜொகூர் - லார்க்கின் தொழில்பேட்டை பகுதியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் நேற்று காலை 9 மணியளவில் குடிநுழைவுத் துறை, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், மனிதவள அதிகாரி ஒருவரும் 13 பெண்கள் உட்பட 80 வெளிநாட்டுத் தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறைந்த செலவில் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்காக, ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டுத் தொழிலாளர்களை இந்தத் தொழிற்சாலைகள் வேலைக்கு அமர்த்தியதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் மற்றும் இந்தோனேசியவைச் சேர்ந்த அந்த வெளிநாட்டினர் முறையான ஆவணங்கள் இல்லாமை மற்றும் குடிநுழைவுச் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு செத்தியா ட்ரோபிகா குடிநுழைவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த சட்டவிரோதப் பணி நியமனம் தொடர்பாக விசாரிப்பதற்காக அந்தத் தொழிற்சாலையின் மனிதவள அதிகாரியையும் கைது செய்துள்ளதாக ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஷ்டி முகமட் டாரூஸ் தெரிவித்துள்ளார்.








