உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வேலைவாய்ப்பும் சந்தை தேவையை பூர்த்தி செய்வதுடன், உயர்தர ஊதியத்தையும், வேலை தேடுபவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு அமைவதையும் மனிதவள அமைச்சு உறுதி செய்யும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான வேலைகளை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், வேலை தேடுபவர்களின் திறமைக்கு ஏற்ப வேலையின் தரத்தை உறுதி செய்வதில் அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் விரிவான 'மை பியூச்சர் ஜாப்ஸ்' தளத்தின் வாயிலாக முதிர்ச்சியடைந்த தொழிலாளர் சந்தை சூழலை அமைச்சு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முறையான ஊதியம் வழங்கப்படாத மற்றும் வேலை தேடுபவர்களுக்கு பொருத்தமற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அர்த்தமில்லை என்று குறிப்பிட்ட அவர், அந்த குறைபாடுகளைக் களைவதற்கே 'மை பியூச்சர் ஜாப்ஸ்' தளம் பயன்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதுவரை 300,000-க்கும் மேற்பட்ட வேலை விண்ணப்பங்கள் பதிவாகி, அதில் 200,000 விண்ணப்பங்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன என்றும், தளம் இன்னும் 100,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களைக் கொண்டுள்ளது என்றும் அவர் இன்று ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு 'அனைவருக்குமான ஜொகூர்' என்ற கருப்பொருளில் பத்து முக்கிய வாக்குறுதிகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை நேற்று பக்காத்தான் ஹராப்பான் வெளியிட்டது.
அதில், நவீன மற்றும் உயர் மதிப்புள்ள தொழில்களை மேம்படுத்துவதன் மூலம் ஜொகூருக்குத் தேவையான 250,000 உயர்தர மற்றும் கண்ணியமான வேலைகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், மாநிலத்தின் சராசரி ஊதியத்தை குறைந்தது 30 விழுக்காடு உயர்த்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜோகூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 172 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வரும் ஜூலை 11-ஆம் தேதி மாநில தேர்தல் நடைபெறுகிறது.










