சுங்கை பக்கா பாலத்தில் இருந்து விழுந்த 47 வயதுடைய நூர் ஹஸ்லினி தின் என்ற பெண் இன்று காலை 10.30 மணியளவில் ஆற்றில் மூழ்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை சுமார் 45 மீட்டர் உயரமுள்ள அந்தப் பாலத்தில் இருந்து அவர் விழுந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் இன்று காலை 9 மணிக்குத் தங்களது தேடுதல் பணியை மீண்டும் தொடங்கினர்.
அவர் விழுந்ததாகக் கூறப்படும் இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், மரக்கிளையில் சிக்கியபடி மிதந்த அவரது உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக Dungun மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டண்ட் நிக் அப் ஹலிம் நிக் மாட் தெரிவித்துள்ளார்.
38 பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுத்த இந்தத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் உடல் கண்டெடுக்கப்பட்டதற்கு 77 வயதுடைய பெண்ணின் தந்தை தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். தன் வீட்டின் அருகே உள்ள பாலத்தில் இருந்து தனது மகள் ஆற்றில் விழுவதைக் கண்டு காப்பாற்ற ஓடியதாகவும், ஆனால் பலத்த நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டு மூழ்குவதை மட்டுமே தம்மால் பார்க்க முடிந்ததாகவும் அவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.








