ஜோகூர் மாநிலத் தேர்தலில், கூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட என்52. செனாய் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் பகாதான் ஹராப்பான் வேட்பாளராக வோங் போர் யாங் களம் இறங்கியுள்ளார்.
தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நி சிங்கை நாடாளுமன்ற உறுப்பினராகக் கொண்ட இந்தத் தொகுதியில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மக்களுடன் இணைந்து பயணித்தவர் வோங் போர் யாங்.
அனைத்து இன மக்களுடனும் நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ள இவர், செனாய் மற்றும் சாலெங் ஆகிய பகுதிகளில் உள்ள உள்ளூர் சமூகங்களின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, இப்பகுதி ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று, அவர்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
வருகிற 11 ஜூலை அன்று நடைபெறவுள்ள ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில், மடானி அரசாங்கத்தின் கொள்கைகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பகாதான் ஹராப்பான் -இன் அனைத்து இன மக்களுக்குமான சமத்துவக் கொள்கைகளை நிலைநிறுத்த, தமக்கும் தம்மோடு களம் காணும் தோழமை புக்கிட் பெர்மாய் வேட்பாளர் சியாப்வான் அவர்களுக்கும் மக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும் என வோங் போர் யாங் கோரிக்கை விடுத்துள்ளார்.
செனாய் தொகுதியின் தங்கு தடையற்ற வளர்ச்சியை உறுதி செய்ய, மக்கள் தனக்கு மீண்டும் ஒருமுறை தங்கள் வாக்குகளை தந்து, பேராதரவு தருமாறு வோங் போர் யாங் உருக்கமுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.








