முழுமையான ஆவணங்கள் பெறப்பட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பெரும்பாலான சொக்சோ இழப்பீட்டுக் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படுவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
பாரிசான் நேஷனலின் தம்பின் எம்.பி. டத்தோ முகமட் ஈசாம் முகமட் ஈசா இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டத்தோஸ்ரீ ரமணன், கடந்த ஆண்டு சொக்சோ தனது வாடிக்கையாளர் சாசனம் இலக்குகளை மிகச் சிறப்பாக எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். லிண்டுங் பெகெர்ஜா, லிண்டுங் கெந்திரி மற்றும் லிண்டுங் காசிஹ் ஆகிய திட்டங்களில் சராசரியாக 96.86 விழுக்காடு இலக்கும், வேலைவாய்ப்பு காப்புறுதித் திட்டமான லிண்டோங் கெர்ஜாயா திட்டத்தில் 99.68 விழுக்காடு இலக்கும் எட்டப்பட்டுள்ளது.
தற்போது லிண்டுங் ஃபாயிதா இணையதளம் மற்றும் '1Best' முறை மூலம் கோரிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் இந்த வேகம் சாத்தியமாகியுள்ளது. மேலும், போலி இழப்பீட்டுக் கோரிக்கைகளைத் தடுக்க ஏஐ தொழில்நுட்பம் மற்றும் கடுமையான சரிபார்ப்பு முறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதிப்படுத்தினார்.








