எம் 40 எனப்படும் நடுத்தர வருமானக் குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் புதிய திட்டங்களுக்கு 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் தலைமையகத்தில் 2027ஆம் ஆண்டு பட்ஜெட் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், எம் 40 மக்களின் சுமையைக் குறைப்பதற்கான பல்வேறு அம்சங்கள் அரசாங்கத்தின் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்.
2026ஆம் ஆண்டு பட்ஜெட்டில் குறிவைக்கப்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் மானியங்கள் தொடரப்பட்ட நிலையில், அதிக மின்சாரமும் எரிபொருளும் பயன்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அவை பயனளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், குழந்தை பராமரிப்பு சலுகை 6 வயதிலிருந்து 12 வயது வரை நீட்டிப்பு, உள்நாட்டு சுற்றுலாவுக்கான RM1,000 வரிச் சலுகை, வீடு வாங்குவோருக்கான முத்திரைத் தீர்வை விலக்கு விரிவாக்கம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளும் எம் 40 மக்களை இலக்காகக் கொண்டிருந்தன என்ற பிரதமர் விளக்கினார்.
இதனிடையே மற்றொரு விவகாரத்தில் தாபுங் ஹாஜி தொடர்பான விசாரணைகள், அரச ஆணைய விசாரணை அறிக்கையின் வரம்பைத் தாண்டியும் தொடர்வதாக பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார். 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தை மட்டுமே முந்தைய அரச ஆணையம் ஆய்வு செய்த நிலையில், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டங்களையும் அமலாக்கத் துறையினரும் விசாரணை அதிகாரிகளும் ஆராய்ந்து வருவதாக பிரதமர் கூறினார்.








