ஜோகூர் பாரு–சிங்கப்பூர் இடையிலான விரைவுப் போக்குவரத்து அமைப்பான ஆர்.டி.எஸ் இணைப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் செயல்பாட்டுக்கு வந்ததும், பயணிகளின் குடிநுழைவுச் சோதனையானது சில விநாடிகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஜோகூர்–சிங்கப்பூர் இடையே தினசரி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கானோருக்கு பெரும் நிவாரணம் கிடைக்கவுள்ளது.
இது குறித்து எம்.ஆர்.டி கார்ப் ஆர்.டி.எஸ் இணைப்பு திட்ட இயக்குநர் ஸுல்கிப்ளி முகமது வெளியிட்டுள்ள தகவலில், புக்கிட் சாகார் ஐ.சி.க்யூ வளாகத்தில் 100 மின்னணு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் விரைவாக குடிநுழைவு நடைமுறைகளை நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகள், வருகை மண்டபத்தை அடைந்ததும், முதலில் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்து, பின்னர் கியு.ஆர் குறியீடு அல்லது கடப்பிதழைப் பயன்படுத்தி மின்னணு நுழைவாயில்கள் மூலமாக குடியேற்றச் சோதனையை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கேனரில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பயணி மட்டும் தனி இரண்டாம் நிலைச் சோதனைக்கு அனுப்பப்படுவார் என்றும், இதன் மூலம் மற்ற பயணிகளின் போக்குவரத்து பாதிக்கப்படாது என்றும் ஸுல்கிப்ளி முகமது தெரிவித்துள்ளார்.
ஐ.சி.கியு வளாகத்தில் 10 உடல் பாதுகாப்புச் சோதனை வழித்தடங்கள், 18 பயணப்பை ஸ்கேனர்கள் மற்றும் பயணப்பை இல்லாதவர்களுக்கான தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நேரடியாக கண்காணிக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 4 கிலோமீட்டர் நீளமுள்ள ஆர்.டி.எஸ் இணைப்பானது, ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகார் நிலையத்தையும் சிங்கப்பூரின் ஊட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தையும் இணைக்கும். இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு தலா 10,000 பயணிகளை கையாளும் திறன் கொண்ட இந்த சேவை, தினசரி சுமார் 40,000 பயணிகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது








