அரசாங்கத்தின் தற்போதைய நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் வரை, ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவும் பாரிசான் நேஷனலும் தங்களது பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்றும் என அம்னோ உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது காலித் நோர்டின் தெரிவித்துள்ளார்.
அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே, பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க பாரிசான் ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபா, ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிராக போட்டியிட்ட போதிலும், அந்த முடிவுகளை ஒற்றுமை அரசாங்கத்தின் ஒத்துழைப்பில் இருந்து விலகுவதற்கான காரணமாக பாரிசான் நேஷனல் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநில அளவில் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் கூட, கூட்டரசு மட்டத்தில் நல்ல ஒத்துழைப்பை தொடர முடியும் என்றும் முகமது காலித் நோர்டின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
16-வது பொதுத்தேர்தலானது முக்கிய அரசியல் முடிவுக்கான அடுத்தக்கட்ட தருணமாக இருக்கும் என்றும், அதுவரை பக்காத்தான் ஹராப்பானுடனான கூட்டரசு ஒத்துழைப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








