சாலை விபத்தில் உயிரிழந்த 36 வயதான பெண்ணின் உறுப்பு தானத்தை கௌரவிக்கும் வகையில் பினாங்கு மருத்துவமனை பச்சை நிற விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டது.
ஐந்து பிள்ளைகளின் தாயான அப்பெண், உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்ததாக பினாங்கு சுகாதாரத்துறை தெரிவித்தது.
அவரது விருப்பத்தை மதித்து குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அவரது மரணம் மற்றும் உறுப்பு தானம் மூலம் பலருக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
“உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினரின் மன உறுதியும் தாராள மனப்பான்மையும் இனம், மதம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மலேசியர்களுக்கும் முன்மாதிரியாக அமையட்டும்.
“நம்பிக்கையுடன் காத்திருப்பவர்களின் வாழ்க்கையில் புதிய ஒளியை ஏற்படுத்தும் ஒரு கதாநாயகனாக நீங்களும் மாறலாம். தற்போது மைசெஜாதரா செயலி மூலம் உறுப்பு தான உறுதிமொழியை எளிதாகப் பதிவு செய்யலாம்,” என்றும் பினாங்கு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.








