கிள்ளானில் கடந்த மாதம் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின்போது, ‘ராக்கி’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 24 வயதான ஷா ஹிஜாம் மீது வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
கால்நடை சேவைகள் துறை சார்பில் ஷா ஹிஜாம்-க்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்களான ரஃபீக் ரஷீத் அலி மற்றும் மஹ்மூத் அப்துல் ஜூமாட் தெரிவித்தனர்.
எனினும், எந்தச் சட்டத்தின் கீழ் அல்லது எந்தப் பிரிவின் கீழ் ஷா ஹிஜாம் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது என்பதை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.
கடந்த ஜூலை 29-ஆம் தேதி போர்ட் கிள்ளானில், கிள்ளான் மாநகராட்சி மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது ராக்கி உயிரிழந்தது.
இந்த நடவடிக்கையில் தாம் பங்கேற்றதை ஷா ஹிஜாம் ஒப்புக்கொண்டிருந்தாலும், நாயை காயப்படுத்தவோ கொல்லவோ வேண்டும் என்ற நோக்கத்துடன் தாம் செயல்படவில்லை என மறுத்திருந்தார்.
ராக்கி-யின் மரணம் தமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








