மலேசியாவின் 69-ஆவது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடத் தயாராகும் நிலையில், இனத்தையும் மதத்தையும் முன்வைத்து வெறுப்பையும் பிளவையும் தூண்டும் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மலேசிய சர்வ சமய மன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் இன, மத அடிப்படையில் வாக்காளர்களை அணிதிரட்டிய அரசியல் பேச்சுகள் அதிகரித்திருப்பது கவலைக்குரியது என்று அந்த மன்றம் தெரிவித்துள்ளது.
இனத்தையோ மதத்தையோ காரணம் காட்டி எந்த மலேசியரும் எதிரியாக சித்தரிக்கப்படக் கூடாது என்றும், மதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்றும் அது எச்சரித்துள்ளது.
வெறுப்பு, அச்சம், பொய்த்தகவல் மற்றும் அவதூறுகளைத் தூண்டுவோருக்கு எதிராக சட்ட அமலாக்க அமைப்புகள் பதவியையும் அரசியல் செல்வாக்கையும் பார்க்காமல் கடுமையாகவும் பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் உண்மையான தேசப்பற்று என்பது, நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதையைப் பாதுகாப்பதில்தான் உள்ளது என்றும் சர்வ சமய மன்றம் வலியுறுத்தியுள்ளது.








