காய்கறி பயிரிடும் 38 வயது வங்கதேச ஆடவர் ஓட்டிய சொகுசு மெர்சிடிஸ் பென்ஸ் காரை கெடா சாலைப் போக்குவரத்துத் துறையான ஜே.பி.ஜே. பறிமுதல் செய்துள்ளது.
நேற்று லங்காவி,ஜாலான் பாடாங் மாட்சிராட், பகுதியில் நடத்தப்பட்ட "ஆப்ஸ் லக்சுரி" சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆடவர் கடந்த 2025 மே 27-ஆம் தேதி முதல் அந்த மெர்சிடிஸ் காரைப் பயன்படுத்தி வந்ததாக கெடா ஜே.பி.ஜே. இயக்குநர் ஸ்டீன் வான் லூதாம் தெரிவித்தார்.
காய்கறிகளை ஈரச்சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு சென்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். விசாரணையில், கார் தமக்குச் சொந்தமானது எனக் கூறிய அவர், அதன் கொள்முதல் விலையை தெரிவிக்கவில்லை.
மேலும், அவரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதுடன், வாகன உரிமமும் காலாவதியாகி, காப்புறுதியும் கடந்த ஜூலை 26-ஆம் தேதியுடன் முடிவடைந்திருந்தது ஜேபிஜே சோதனையில் தெரியவந்துள்ளது.








