ஜோகூர் மக்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கல்விக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் ஜோகூர் இடைக்கால சுல்தான், துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அவர்களுக்கு ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி நன்றி தெரிவித்துள்ளார்.
ஜோகூர் இளையோர் உபகாரச் சம்பளம் திட்டத்தின் இரண்டாவது குழுவில் இடம்பெற்றுள்ள ஆறு மாணவர்களுடன் சந்திப்பு நடத்தியதாக மந்திரி பெசார் தெரிவித்தார். இவர்கள் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் உயர்கல்வியைத் தொடர உள்ளனர்.
ஏ- லெவல் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ள ஆறு மாணவர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
எம்பர் போய் 4 ஏ* பெற்று, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் நிலையான கட்டமைக்கப்பட்ட சூழல், எரிசக்தி மற்றும் வளங்கள் துறையிலும், முஹம்மது ஃபாய்க் ஃபத்துல்லா முகமது யாசிட் 3 ஏ* மற்றும் 1ஏ பெற்று அதே பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையிலும் பயில உள்ளனர்.
ஹேமராஜ் த/பெ தனபாலன் 3 ஏ* மற்றும் 1ஏ பெற்று மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியல் துறையிலும், நூர் மரியம் பிந்தி நோராசம் 3 ஏ* மற்றும் 1ஏ பெற்று உயிர்வேதியியல் பொறியியல் துறையிலும் கல்வியைத் தொடர உள்ளனர்.
டான் வென் பின் 3 ஏ* மற்றும் 1ஏபெற்று அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையிலும், நூருல் ஹிதாயா பிந்தி நோராசம் 2 ஏ* மற்றும் 2 ஏ பெற்று யூ.சி.எல்-ல் வேதியியல் பொறியியல் துறையிலும் பயில உள்ளனர்.
இந்தச் சாதனை மாணவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஜோகூர் மக்களுக்கும் பெருமை அளிப்பதாக ஓன் ஹபிஸ் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் கிடைக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவர்கள் அறிவையும் நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொண்டு, தங்களது திறமைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், உபகாரச் சம்பளத்தின் மூலம் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள், ஜோகூரின் பெயரை பெருமையுடன் உயர்த்துவதுடன், தாங்கள் பெற்ற அறிவையும் நிபுணத்துவத்தையும் மீண்டும் ஜோகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 








