நாட்டின் 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டமானது, மக்களின் வருமானத்தை உயர்த்துதல், தரமான வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் மூலோபாய முதலீடுகள் மூலம் மலேசியாவின் பொருளாதார போட்டித்திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூன்று முக்கிய முன்னுரிமைகளாக “உச்சத்தை உயர்த்துதல், அடித்தளத்தை வலுப்படுத்துதல், நல்ல நிர்வாகத்தை நிலைப்படுத்துதல்” ஆகியவை அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செமிகண்டக்டர், எரிசக்தி மாற்றம், டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இஸ்லாமிய நிதி உள்ளிட்ட துறைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை வழங்கும் என்றும், 2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டமானது அக்டோபர் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்தர முதலீடுகளை ஈர்த்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் மலேசியத் தயாரிப்புகளை உலகளாவிய சந்தையை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமீர் ஹம்சா அசிசான் உறுதியளித்துள்ளார்.








