ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் பெர்லிங், சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் ஆலன் தீ பூன் சோங்கின் தேர்தல் கொள்கை அறிக்கை, மத்திய அரசின் இலக்குகளோடு ஒத்துப்போவதாக ஜசெக துணைப் பொதுச்செயலாளரும், தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
அலன் தீ வெற்றி பெற்றால், பெர்லிங் பகுதி வணிகர்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி, பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தடையின்றிக் கிடைக்கத் தம்மால் வழிவகை செய்ய முடியும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் உறுதியளித்தார்.
பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்டீவன் சிம், அலன் தீயின் சிறு, நடுத்தர நிறுவன மேம்பாட்டுத் திட்டங்கள், தமது அமைச்சின் 'பவர்அப்10கே' பிரச்சாரத்தோடு இணைந்து செயல்படக்கூடியவை என்றார். நடப்பு 2026-ஆம் ஆண்டில் மட்டும், நாடு தழுவிய அளவில் சிறு, நடுத்தர வணிக மேம்பாட்டிற்காக 60 பில்லியன் ரிங்கிட் செலவில் 300-க்கும் மேற்பட்ட திட்டங்களை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மே 31 வரை, நாடு முழுவதும் 6 பில்லியன் ரிங்கிட் நிதியுதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளது; இதில் ஜோகூரில் மட்டும் 13,500-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் 475 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியைப் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.
இதில் முக்கிய அம்சமாக , 'முத்ரா' திட்டத்தின் கீழ் மே மாதம் வரை 3,200-க்கும் மேற்பட்ட இந்தியத் தொழில்முனைவோருக்கு 62 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று ஸ்டீவன் சிம் சுட்டிக்காட்டினார்.
இது அனைத்து இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிலும் மத்திய அரசு கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பை நிரூபிப்பதாக அமைந்திருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், பெர்லிங் தொகுதியில் அதிக வேலைவாய்ப்புகளையும் புதிய பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்க முடியும் என அமைச்சர் ஸ்டீவன் சிம் வலியுறுத்தினார்.








