சரவாக் மாநிலம் சிபு, தாரோ பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் வழக்கமான தொழுகைக்காகத் தயாரான வேளையில், மின்சாரம் தாக்கியதில் நான்காம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
பள்ளியின் நீராடும் பகுதியில், மூன்று மாணவர்களுக்கு நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 8 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக மாத்து தாரோ மாவட்ட போலீஸ் தலைவர் ரகீம் மிஹோஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தின் போது, 16 வயதுடைய மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், 15 வயதுடைய மூன்றாம் படிவ மாணவர் ஒருவர் கடுமையாக காயமடைந்து, தாரோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக சிபு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மற்றொரு 15 வயது மாணவருக்கு காயம் ஏற்படவில்லை என்றும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ரகீம் மிஹோஸ் தெரிவித்துள்ளார்.








