பாரிசான் நேசனல் கூட்டணியுடன் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி இணைந்து செயல்படுவதைக் கேள்வி கேட்ட மசீச இளைஞர் பிரிவு தலைமைச் செயலாளர் சாவ் யீ ஃபுங், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து மசீச பொதுச்செயலாளர் சோங் சின் வூன் அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், "ஆம், நீங்கள் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கு வர வேண்டிய அவசியமில்லை. நன்றி" என்று குறிப்பிட்டுள்ளதாக சாவ் யீ ஃபுங் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டணி உடன்பாடு குறித்து மசீச மத்திய தலைமை எவ்விதக் கூட்டமும் நடத்தவில்லை என்றும், இது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதாக ஜசெக கட்சியை விமர்சித்துவந்த நாம், தற்போது அதே பாதையில் செல்வது வேதனையளிப்பதாக சாவ் யீ ஃபுங் சுட்டிக்காட்டியுள்ளார். கேள்வி கேட்பது தவறானதாகக் கருதப்பட்டால், நாம் இழக்கப்போவது ஒரு தனிமனிதனின் குரலை மட்டுமல்ல, ஒரு அரசியல் கட்சியின் மிக முக்கியமான விழுமியங்களைத்தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.








