நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், தற்போதைய இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருனின் சிறந்த நிர்வாகச் சாதனைகளையும், மாநில அரசின் தொடர்ச்சியையும் முதன்மைப்படுத்தியே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வாக்குச் சேகரிக்கும் என்று அதன் தகவல் பிரிவுத் தலைவரும் தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜெம்பூல் மாவட்ட நிர்வாக வளாகத்தில் அமைந்துள்ள வேட்புமனுத் தாக்கல் மையத்திற்கு, ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜி. மணிவண்ணனுக்கு ஆதரவாக ஃபாஹ்மி ஃபட்சில் நேரில் வருகை தந்தார்.
வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில், கடந்த எட்டு ஆண்டு கால அமினுடின் ஹருனின் ஆட்சியில் மாநிலத்தின் பொருளாதாரம், ஜக்காத் வசூல் மற்றும் பல்வேறு கட்டமைப்பு மேம்பாடுகள் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். எவ்வித ஊழல் புகார்களோ, சர்ச்சைகளோ இல்லாத ஒரு தூய்மையான மற்றும் நிலையான ஆட்சியை அவர் வழங்கியுள்ளார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மாநில அரசிற்கும் மத்திய அரசிற்கும் இடையே நெருக்கமான இணக்கமான உறவு நீடிப்பது நெகிரி செம்பிலானின் தொடர் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. ஜெம்பூல், ஜெராம் பாடாங் போன்ற பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது எங்களது முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். எங்களின் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் புதிய முதலீடுகளை ஈர்த்து இளைஞர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்,” என்றார்.








