ஜொகூர் மாநிலத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். ஜொகூர் பாரு- இஸ்தானா புக்கிட் செரீன்-இல், ஜொகூர் மாநிலத்தின் தற்காலிக சுல்தான், துங்கு மகோத்தா இஸ்மாயில் முன்னிலையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டனர். இந்த புதிய குழுவில் நான்கு பேர் புதிய முகங்களாவர்.
இந்த நிகழ்வில் ஜொகூர் மந்திரி பெசார் ஒன் ஹாபிஸ் காசி, யாங் டி-பெர்துவா ஜூமா மஜிலிஸ் டிரஜா ஜொகூர், அப்துல் ரஹீம் ராம்லி மற்றும் மாநிலச் செயலாளர் முகமது ரிதா அப்துல் காதிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஜொகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேசனல் 56 இடங்களில் 48 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக மந்திரி பெசாராக ஒன் ஹாபிஸ் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.








