மலாக்கா மாநில பாரிசான் நேஷனல் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திலிருந்து முற்றிலும் வெளியேறவும், தங்களது அனைத்துப் பதவிகளையும் உடனடியாக ராஜினாமா செய்யவும் மலாக்கா மாநில ஜசெக ஒரு மிகப்பெரிய அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மலாக்கா மாநில சட்டமன்றத்தில் 'நியமன சட்டமன்ற உறுப்பினர்' முறையை அறிமுகப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே ஜசெக இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது. இன்று மதியம் இந்தச் சட்டத்திருத்தம் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஜசெக பிரதிநிதிகள் மலாக்கா சட்டமன்ற வளாகத்திலேயே இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம், மலாக்கா மாநில அரசாங்கத்தில் தற்போதிருக்கும் ஒரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி , இரு துணை ஆட்சிக்குழு உறுப்பன்ர்கள் , ஒரு துணை சபாநாயகர் மற்றும் அனைத்து நகராண்மைக் கழக உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் என தங்களது அனைத்துப் பொறுப்புகளையும் ஜசெக துறக்கவுள்ளது. இதன்படி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அலெக்ஸ் சீ, துணை ஆட்சிக்குழு உறுப்பினர்களான லோ சீ லியோங், லெங் சாவ் யென் மற்றும் துணை சபாநாயகர் கெர்க் சீ யீ ஆகியோர் மாநில அரசில் தங்களது நிர்வாகப் பதவிகளை ராஜினாமா செய்கின்றனர்.
இந்த அதிரடி ராஜினாமா முடிவு குறித்து, மலாக்கா மாநில ஜசெக தலைவர் கூ பொய் தியோங் நேற்று இரவு கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு விரிவான விளக்கம் அளித்து, அவர்களின் முழுமையான ஆதரவையும் பெற்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








