மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM நாட்டின் ஊழலை ஒழிப்பதில் ஊடகங்கள் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், சிறப்பு ஊடக விருதளிப்பு விழாவை நேற்று கோலாலம்பூரில் நடத்தியது.
SPRM-இன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், லஞ்ச ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்த்த ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பணமுடிப்பும், நற்சான்றிதழும் வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டது.
அந்த வகையில், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக வழங்கி வரும் முன்னணி தமிழ் ஊடகங்களில் ஒன்றான 'திசைகள்', இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டது.

நாட்டின் தூய்மையான நிர்வாகத்திற்குத் தனது செய்திகளின் வாயிலாகத் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வரும் 'திசைகள்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பசுபதி அவர்களுக்கு, டான் ஸ்ரீ அசாம் பாக்கி பாராட்டுப் பத்திரத்தையும் நற்சான்றிதழையும் வழங்கிச் சிறப்பித்தார்.
லஞ்ச வேர்களைத் துடைத்தெறிவதில் தமிழ் ஊடகங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்த இந்த விருது, ஊடகத் துறையினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றிய SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி, "மக்களுக்குத் துல்லியமான தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகவியலாளர்கள் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பைப் பாராட்டுவதே இந்த விருது வழங்கும் விழாவின் முக்கிய நோக்கமாகும் என்றார்.
இந்த அங்கீகாரம், ஊடக நண்பர்களின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அடையாளமாகும். இது எதிர்காலத்தில் இன்னும் தரமான, நெறிமுறை சார்ந்த மற்றும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை உருவாக்க ஒரு ஊக்கியாக அமையும்," எனத் தெரிவித்தார்.
மேலும், SPRM மற்றும் ஊடகங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம், ஆதாரமற்ற ஊகங்களைத் தகர்த்து உண்மைகளின் அடிப்படையிலான தகவல்களைச் சமூகத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்றும் டான்ஸ்ரீ அசாம் பாக்கி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விருதளிப்பு விழாவில் அதிகமான ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.










