நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமைமிக்க அடையாளங்களுள் ஒன்றான லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளிக்கு ஒரு புதிய விடியலாக, அதன் அதிநவீனப் புதிய வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.


கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடெக் மற்றும் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ ஆகியோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை அடிக்கல் நாட்டி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.


இந்த விழாவில், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள்குமார் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். எம்.வி.வி சிட்டி மற்றும் அதன் சுற்று வட்டார இந்தியச் சமூகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் மாநில அரசு கொண்டுள்ள தீவிர அக்கறையையும் ஆதரவையும் அவர் தனது வருகையின் மூலம் முன்னிலைப்படுத்தினார்.


இந்த மாபெரும் மறுமலர்ச்சித் திட்டத்தின் பின்னணியில், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள்குமார் அவர்களின் அர்ப்பணிப்பும், ஓயாத உழைப்பும் மிக முக்கியமான உந்துசக்தியாகத் திகழ்ந்துள்ளன. வெறும் மக்கள் பிரதிநிதியாக மட்டும் நின்று விடாமல், இப்பள்ளியின் அவல நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் அவர் காட்டிய தீவிர அக்கறை பாராட்டுக்குரியது. மாநில அரசாங்கத்தின் மூலம் மலேசியா விஷன் வேலி திட்டத்தின் கீழ், பள்ளிக்காக 6 ஏக்கர் பரப்பளவிலான புதிய நிலத்தை ஒதுக்கீடு செய்து தந்ததில் தொடங்கி, கட்டுமானத்திற்கான நிதித் தேவைகளைத் திட்டமிட்டது வரை அருள்குமாரின் பங்களிப்பு அளப்பரியது.


இப்புதிய பள்ளி வளாகத்தின் ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு 9 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டது. இதில் மேம்பாட்டாளர் நிறுவனமான மேட்ரிக்ஸ் கான்செப்ட்ஸ், தனது சமூகப் பொறுப்புணர்வின் கீழ் சரி பாதித் தொகையான 4.5 மில்லியன் ரிங்கிட்டை (50 விழுக்காடு) முழுமையாக ஏற்றுக் கொண்டது.

எஞ்சிய 4.5 மில்லியன் ரிங்கிட் தொகையைத் திரட்டுவது ஒரு பெரும் சவாலாக இருந்த போது, ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் அவர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத்துடன் கைகோர்த்து களமிறங்கினார். சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டரசு போக்குவரத்து அமைச்சருமான மாண்புமிகு அந்தோணி லோக் தலைமையில், அண்மையில் சிரம்பானில் ஒரு பிரம்மாண்ட நிதி திரட்டும் இரவு உணவு நிகழ்வு மிக வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்விற்காகத் தாராள மனப்பான்மை கொண்ட பெருநிறுவன நன்கொடையாளர்களையும், சமூக ஆர்வலர்களையும் நேரில் ஒருங்கிணைத்த பெருமை ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமாரையே சாரும். அவரது சீரிய முயற்சியால், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சார்பில் மத்திய அரசாங்கத்தின் 2 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியும், தனியார்துறை நிறுவனங்களின் தலா 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடைகளும் திரட்டப்பட்டு, இலக்கு வைக்கப்பட்ட எஞ்சிய 4.5 மில்லியன் ரிங்கிட் தொகை மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டது.

கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும், வளர்ந்து வரும் சமூகங்களுக்கு ஏற்ப கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் தற்போதைய காலக்கட்டத்தின் முக்கியத் தேவையாகும். வருங்காலத் தலைமுறையினருக்கு மிகவும் சாதகமான, உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதில் அரசாங்கம், கல்வித் துறை சார்ந்தவர்கள் மற்றும் தனியார் துறையினரின் கூட்டு முயற்சிகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் புதிய பள்ளித் திட்டம் பிரதிபலிக்கிறது.

கல்வி, பொருளாதார வளர்ச்சி மற்றும் தரமான வாழ்க்கை முறை ஆகியவை ஒன்றோடொன்று இணைந்து பயணிக்கும் ஒரு நிலையான சமூகத்தை உருவாக்குவதே இந்த ஒருங்கிணைந்த நகரத்தின் நீண்டகால தொலைநோக்குத் திட்டமாகும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடெக் தனது உரையில் விவரித்தார்.

அடுத்த 12 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ள இந்த புதிய அதிநவீன வளாகத்தில் 12 வகுப்பறைகள், அறிவியல்-கணினி அறைகள், மழலையர் பள்ளி மற்றும் பிரம்மாண்ட விளையாட்டு மைதானம் ஆகியவை அமையவுள்ளன.

ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று, தற்போது சுமார் 20 மாணவர்களுடன் இயங்கும் இப்பள்ளி, எம்.வி.வி சிட்டி நகரம் அதிவேக மேம்பாடு கண்டு வரும் வேளையில் மீண்டும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் தங்குதடையின்றித் தங்களின் தரமான ஆரம்பக் கல்வியைப் பெறும் ஓர் உன்னத மையமாக உருவெடுக்கும் என்று பள்ளி வாரியத் தலைவர் நவஜீவன் இராமசாமி நெகிழ்ச்சியோடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












