பினாங்கு, பாகான் வட்டாரத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மின் சுடலைக்கு மத்திய அரசு வழங்கிய மொத்த மானியம், தற்போது 2.5 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டு இருப்பதாக பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்எஸ்என் ராயர் தெரிவித்தார். ஆரம்பத்தில் ஒரு மில்லியன் ரிங்கிட்டும், பின்னர் மேலும் 5 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்ட நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேலும் கூடுதலாக இன்னும் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ராயர் தெரிவித்தார்.

இதற்காக பிரதமர், மத்திய அரசு, ஜசெக முக்கிய தலைவர்களான பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோருக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ராயர் குறிப்பிட்டார்.
பட்டர்வொர்த், பாகான் ஜாலான் சிராமில் நிர்மாணிக்கப்படவிருக்கும் மின் சுடலையின் கட்டுமான தளத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராயர் இவ்விவரத்தை குறிப்பிட்டார்.
கடந்த பல ஆண்டுகளாக இந்து அறப்பணி வாரியம் முன்னெடுத்த கோரிக்கையின் பலனாக குறிப்பாக அப்பகுதியில் வசிக்கும் இந்து சமூகத்தினருக்கான இறுதிச்சடங்கு வசதி தற்போது உருவாகி வருகிறது என்றார் ராயர்.

இதனிடையே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சுடலை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. கட்டிடம் மற்றும் இன்சினரேட்டருக்கான குத்தகைகள் முறையாக டெண்டர் விடப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதம் தொடங்கி சுமார் ஆறு மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
எனினும் இன்சினரேட்டருக்கான செபராங் பிறை மாநகர் மன்றத்தின் சிசிசி (CCC) ஒப்புதல் வழங்கப்படும் நடைமுறையால் மேலும் இரண்டு மாதங்கள் தாமதம் ஏற்படலாம் என்றாலும், அடுத்த ஆண்டு மத்தியப் பகுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த மின் சுடலை கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று குமரன் கிருஷ்ணன் விளக்கினார்.
இச்சந்திப்பின் போது பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கும் கலந்து கொண்டார்.








