ஈப்போ, பிப்ரவரி.17-
பேரா மாநிலத்தில் மட்டுமல்ல நாடெங்கிலும் உள்ள உணவுப் பிரியர்களுக்கு நன்கு அறிமுகமான சிம்மோர் ஒரிஜினல் சாமி உணவகம், சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, புதிய பொலிவுடன், நேற்று பிப்ரவரி 16-ஆம் தேதி, காலை 11 மணியளவில், மீண்டும் திறப்பு விழா கண்டது.
எண். 70 & 72 ஜாலான் பெசார், சிம்மோரில், கடந்த 1925 ஆண்டு முதல் செயல்பட்டு வரும், சாமி ஒரிஜினல் உணவகத் திறப்பு விழாவில், கலந்து கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, வேஷ்டி , சேலை அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டது.

சுமார் 200 பேர் சாப்பிடும் வகையில், இந்த உணவகத்தின் மறுசீரமைப்புப் பணிகளானது நடைபெற்று வந்ததால், சில மாத இடைவெளி ஏற்பட்டிருந்தது.
சிம்மோர் சாமி உணவகத்தில் பல்வேறு இந்திய உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
அவற்றில் மல்லி தோசை, மசாலா தோசை, சாம்பார் தோசை, சட்னி இட்லி, மசாலா வடை உள்ளிட்ட உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான ருசியைத் தருகின்றன.
அதே வேளையில், சிம்மோர் சாமி உணவகமானது பல்வேறு வகையான சைவ உணவுகளோடு, அசைவ உணவுகளுக்கும் பெயர் பெற்றது.

இது குறித்து உணவகத்தின் உரிமையாளர் லாரன்ஸ் எட்வர்ட் கூறுகையில், தங்களது உணவகத்தில் தயாரிக்கப்படு்ம் உணவுகள் வீட்டு பக்குவத்தில் இருப்பதுடன், சாமி உணவகத்தின் பாரம்பரிய ருசி மாறாமல் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதே வேளையில் இந்த உணவகத்தின் உணவுகளானது என். முத்துராமன் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவதாகவும் லாரன்ஸ் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்சுவை உணவுகள் சமைக்கப்பட்டு அவர்களுக்கு பரிமாறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.








