கோலாலம்பூர், ஏப்ரல்.19-
மலேசிய இந்தியச் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், மலேசிய இந்திய சமூகப் பொருளாதர உருமாற்றப் பிரிவான மித்ரா அமைப்பு BANTUAN SINAR CAHAYA திட்டத்தின் கீழ் 452 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியை வழங்குகிறது. இவ்வாண்டின் 11-ஆவது தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், தகுதியுடைய 253 பயனாளிகள் பயன் பெற உள்ளனர். இந்த நிதி வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் எவ்விதத் தாமதமுமின்றி நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என மித்ரா உறுதிப்படத் தெரிவித்துள்ளது.
தேசிய நல வாரியத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இந்நிதி, நான்கு முக்கியத் தேவைகளுக்காகப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாள்பட்ட நோயாளிகள் 57 பேருக்கு மருத்துவச் செலவுகளுக்காகத் தலா 3,000 ரிங்கிட் வீதமும், 126 மாற்றுத்திறனாளிகளுக்குத் தலா 1,500 ரிங்கிட் வீதமும் வழங்கப்படுகிறது. மேலும், மகப்பேறு செலவுகளுக்காக 48 தாய்மார்களுக்குத் தலா 1,000 ரிங்கிட்டும், குடும்பத் தலைவரை இழந்த 22 குடும்பங்களுக்கு மரணச் சடங்கு நிதியாகத் தலா 2,000 ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதிப் பங்கீட்டுடன் மட்டுமன்றி, இயற்கைச் சீற்ற நிவாரணம், படுக்கையிலுள்ள நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் போன்ற விரிவான பாதுகாப்பு அம்சங்களையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்டு செயல்படும் மித்ரா, தகுதியுடைய பயனாளிகளின் பட்டியலைத் தனது அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.mitra.gov.my இல் வெளியிட்டுள்ளது.








