உலகப் புகழ்பெற்ற 23-ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் இன்று ஜூன் 11 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து வரலாற்றிலேயே முதன்முறையாக இத்தொடரை நடத்துகின்றன.
மலேசிய நேரப்படி நாளை அதிகாலை 3:00 மணிக்கு மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெறும் மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடக்க ஆட்டத்துடன் இப்போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக 48 நாடுகள் பங்கேற்கும் இந்த மாபெரும் தொடரில், மொத்தம் 104 விறுவிறுப்பான ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இன்று தொடங்கி ஜூலை 19 வரை மொத்தம் 39 நாட்களுக்கு இந்த உலகக் கிண்ண கால்பந்து திருவிழா உலக ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.








