புக்கிட் மெர்தாஜாம், ஜூலை.26-
மலேசியாவில் மீண்டும் Formula 1 கார் பந்தயம் நடத்தப்படுமா என்பது குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இன்று விடை கிடைக்க உள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் காரணமாக, கத்தார் மற்றும் அபுதாபியில் இவ்வாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த F1 பந்தயங்கள் இரத்து செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில், பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் சிரித்தபடியே, இன்று ஞாயிற்றுக்கிழமை பதிலளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மலேசியா கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு Sepang சர்வதேச சுற்றுப் பாதையில் Formula 1 Grand prix போட்டியை நடத்தியது.
அதன் பின்னர், போட்டியை நடத்தும் செலவுகள், உரிமக் கட்டணத் தொகை காரணமாக அந்தப் போட்டி மலேசிய காலண்டரில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், மலேசியாவில் Formula 1 போட்டி மீண்டும் நடைபெறுமா என்ற கேள்விக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் இன்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.








