தெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஈரான், தன்னுடைய கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் விதமாக புதியதாக இரண்டு நவீன ஏவுகணைகளை கடற்படையில் இணைத்திருக்கிறது.
சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த அக். 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
இந்த போரை நிறுத்தக்கோரி அரபு நாடுகள் ஐநா சபையில் தொடர்ந்து சில தீர்மானங்களை கொண்டு வந்தன. ஆரம்பத்தில் கொண்டு வந்த தீர்மானங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகள் தோற்கடித்தன. ஆனால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேறியுள்ளன. ஆனால், ஐநா தீர்மானங்களை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று எந்த நாடுகளுக்கும் கட்டாயம் கிடையாது. எனவே இஸ்ரேல், பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தவில்லை.
இப்படி இருக்கையில், ரஷ்யா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்தை கொண்டு வந்தது. ஐநா பொதுச்சபை போல, ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அவ்வளவு எளிதாக புறந்தள்ளி விட முடியாது. ஒரு முறை இங்கு தீர்மானம் நிறைவேற்றிவிட்டால், அதை அமல்படுத்த வேண்டும். எனவே ரஷ்யாவும், சீனாவும் கொண்டுவரும் மனிதாபிமான போர் நிறுத்த தீர்மானங்களை அமெரிக்கா, தனது வீட்டோ பவரை பயன்படுத்தி தள்ளுபடி செய்து வருகிறது. எனவே தற்போது வரை இங்கு போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.