பெய்ஜிங்: சீனாவில் காலியாக உள்ள சில ஆயிரம் சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இது அந்நாட்டில் நிலவும் வேலையின்மை அவலத்தை காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுக்கு மாற்றாக ஆசியாவில் இருந்து கிளம்பிய பூதம்தான் சீனா. சீன நிறுவனங்களின் பொருட்கள் இல்லாத நாடே கிடையாது எனலாம். அந்த அளவுக்கு நாட்டு மக்களின் எண்ணிக்கையை, உற்பத்தி சக்தியாக மாற்றி வெற்றி கண்டது சீனா. ஆனால் அண்டை நாடுகளுடன் பஞ்சாயத்து, உளவு குற்றச்சாட்டுகள், சீன பொருட்கள் மீதான நம்பகத்தன்மை இல்லாது போன்றவை சீனாவுக்கு இப்போதும் பின்னடைவாகத்தான் இருக்கிறது.
இந்த வரிசையில் தற்போது வேலையின்மை விவகாரமும் சேர்ந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக சீனா இருந்தாலும், கொரோனா தொற்று பாதிப்பின் போது ஏற்பட்ட இழப்பிலிருந்து அந்நாடு இன்னும் முழுமையாக மீளவில்லை. இதற்கு சமீபத்தில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளே உதாரணம்.
நாடு முழுவதும் 237 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்பட்டன. மொத்தம் 39,600 காலிப்பணியிடங்களுக்கு 25 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதாவது ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் 77 பேர் போட்டியிடுகிறார்கள். இது அந்நாட்டில் நிலவும் வேலையின்மை பிரச்னையை தெளிவாக காட்டுவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில்,
"இங்குள்ள தனியார் நிறுவனங்களில் திடீரென ஆட்குறைப்பு நடக்கிறது. மட்டுமல்லாது ஊதிய முரண்பாடுகள் அதிகம் இருக்கின்றன. எனவே எங்களுக்கு அரசு வேலை பெரும் கனவாக இருக்கிறது. இதனால்தான் அதிகமான அளவில் நாங்கள் அரசு தேர்வுகளில் ஆர்வம் காட்டுகிறோம். இது எங்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்தும்" என்று சோஷியல் மீடியாக்களில் குறிப்பிட்டுள்ளனர்.