Jun 8, 2026
Thisaigal NewsYouTube
குழந்தைக் காவல் உரிமைப் போராட்டம்: துபாய் அரச குடும்பத்தின் முன்னாள் மருமகள் பிணையில் விடுதலை
உலகச் செய்திகள்

குழந்தைக் காவல் உரிமைப் போராட்டம்: துபாய் அரச குடும்பத்தின் முன்னாள் மருமகள் பிணையில் விடுதலை

Share:

துபாய் ஆட்சியாளரின் மருமகனான ஷேக் சயீத் பின் மக்தூம் பின் ரஷித் அல் மக்தூமின் முன்னாள் மனைவி ஜைனப் ஜவாத்லி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக துபாய் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தம்பதியினருக்கு இடையேயான நீண்ட கால குழந்தைக் காவல் உரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் கணவரான ஷேக் சயீத், தங்களது மூன்று குழந்தைகளையும் ஜைனப் கடத்திச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சந்திப்பு நேரத்தின்போது, குழந்தைகளைத் தாயார் கடத்திச் சென்று தந்தையிடம் ஒப்படைக்க மறுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று துபாய் அரசுத் தரப்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

அசர்பைஜான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான ஜைனப் ஜவாத்லி, தனது முன்னாள் கணவர் தனது மகள்களைத் தனவரிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்வதாகக் கூறி, கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் உதவி கேட்டு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

இந்த விவகாரத்தில், குழந்தைகள் தங்களின் முழு வாழ்க்கையையும் தாயுடன்தான் கழித்துள்ளனர் என்றும், 2022-ஆம் ஆண்டிலேயே துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இதில் தலையிட்டு முழு காவல் உரிமையையும் ஜைனப்பிற்கு வழங்கியதாகவும் அவரது மனித உரிமை வழக்கறிஞர் டேவிட் ஹேக் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஷேக் சயீத்தின் வழக்கறிஞர் மஹ்மூத் ஹுசைன், 2022-ஆம் ஆண்டில் மூன்று பெண் குழந்தைகளின் காவல் உரிமை தந்தைக்கே வழங்கப்பட்டதாகவும், அந்தத் தீர்ப்பு உயர் நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Related News