சீனாவின் பெய்ஜிங் நகரில், "நிஜ உலக ஸ்பைடர்மேன்" போல ஒரு மூதாட்டி செய்த காரியம் இணையத்தையே அதிரவைத்துள்ளது. 27-வது மாடியில் வசிக்கும் இந்த 89 வயது பாட்டி, எதிர்பாராத விதமாக தனது படுக்கையறைக்குள் சிக்கிக்கொண்டார். கையில் போன் இல்லை, உதவிக்கு ஆள் இல்லை!
பயந்துபோய் கதவை உடைப்பதற்குப் பதில், ஜன்னல் வழியாக வெளியே இறங்கி, ஏசி மெஷின்களைத் தாங்கும் இரும்பு கம்பிகளைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கத் தொடங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சுமார் 50 மீட்டர் உயரத்தில், 21-வது மாடி வரை அசால்ட்டாக இறங்கிய பாட்டியை, தீயணைப்பு வீரர்கள் தகுந்த பாதுகாப்புடன் மீட்டனர். "யாரும் பார்த்திருக்காவிட்டால் தரைத்தளம் வரை நானே இறங்கியிருப்பேன் " என்று அவர் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்த 'சூப்பர் பாட்டியின்' அபார தைரியத்தையும், உடல் வலிமையையும் பாராட்டி வரும் நெட்டிசன்கள், அவரை உலகப்புகழ் பெற்ற மலையேற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.








