ஜப்பானின் புகழ்பெற்ற மவுண்ட் புஜி மலையின் அழகைக் காணக் குவியும் சுற்றுலாப் பயணிகளின் அதீத கூட்டத்தால், அடிவாரத்தில் உள்ள புஜியோஷிடா நகர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் கண்கவர் புகைப்படங்களால் ஈர்க்கப்பட்டு, நாளொன்றுக்கு 10,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் இந்த நகருக்கு வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல், குப்பைகள் குவிதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அநாகரீகமான நடத்தைகளால் உள்ளூர்வாசிகளின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சுற்றுலா வளர்ச்சிக்காகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வருடாந்திர செர்ரி பிளாசம் திருவிழாவை இந்த ஆண்டு ரத்து செய்வதாக நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை பொருளாதாரத்திற்கு உதவியாக இருந்தாலும், குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் அமைதியையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் பணியாளர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, சுற்றுலா வாகனங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் மற்ற சுற்றுலாத் தலங்களான கியோட்டோ மற்றும் காமகுராவிலும் இதே போன்ற 'சுற்றுலா மாசடைவு' சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், அரசு 2030-ஆம் ஆண்டிற்குள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 60 மில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








