அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா கற்பனையான பெயர்களை சூட்டுவதை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அதனை முழுமையாக நிராகரித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் 23 இடங்களுக்கு சீனா சீனப் பெயர்களைச் சூட்டியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் இடங்களுக்குத் தவறான மற்றும் கற்பனையான பெயர்களைச் சூட்டும் சீனாவின் இத்தகைய விஷமத்தனமான முயற்சிகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இத்தகைய ஆதாரமற்ற கதைகளை உருவாக்குவது, அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்ற உண்மையை மாற்றிவிடாது," என்று தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சீராக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இத்தகைய நடவடிக்கைகள் முட்டுக்கட்டையாக அமையும் என்றும், இருதரப்பு உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சீனா இதுபோன்று ஆறாவது முறையாகப் பெயர் மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக 2017, 2021, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் சீனா இதே போன்ற நடவடிக்கைகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் இத்தகைய 'பெயர் சூட்டும் விளையாட்டு' நிலவரத்தை ஒருபோதும் மாற்றாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.








