உலகை அச்சுறுத்தும் வகையில் மிகக் கடுமையான எல் நினோ காலநிலை மாற்றம் உருவாகக்கூடும் என்றும், புவி வெப்பமயமாதல் காரணமாக இதன் விளைவுகள் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் எல் நினோ உருவாவதற்கு 80 சதவீத வாய்ப்புகளும், அது குறைந்தது நவம்பர் மாதம் வரை நீடிப்பதற்கு 90 சதவீத வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த இயற்கை மாற்றத்தால் உலகளவில் வெப்பநிலை உயர்வு, கடுமையான வறட்சி மற்றும் சில பகுதிகளில் அதீத மழைப்பொழிவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். ஏற்கனவே மனித நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகளாவிய வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், புதிய எல் நினோ தாக்கம் இணையும் போது வறட்சி, காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு மற்றும் பயிர்ச்சேதம் போன்ற இயற்கை பேரிடர்களின் தீவிரம் பல மடங்கு அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த எல் நினோ தாக்கத்தினால் 2027-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக மாறக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.








