சிங்கப்பூர் ஓய்வூதியதாரர்களைக் குறிவைத்து 'லவ் ஸ்கேம்' மோசடியில் ஈடுபட்டு வந்த சர்வதேச கும்பலை, கிளந்தான் மாநிலப் போலீசார் அதிரடியாக முறியடித்துள்ளனர். இங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் ரகசியமாக இயங்கி வந்த அழைப்பு மையத்தை சுற்றி வளைத்த போலீசார், மொத்தம் 58 பேரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 52 பேர் சீன நாட்டவர் என்பதுடன் இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் மற்றும் உள்ளூர்வாசிகளும் இதில் அடங்குவர். ஆன்லைன் மூலம் ஆசை வார்த்தை கூறி பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்த இவர்களிடமிருந்து 179,000 ரிங்கிட் மதிப்பிலான கணினிகள் மற்றும் 118 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு மாதமாக இயங்கி வந்த இந்த மோசடி மையம், அதிவேக இணைய வசதியுடன் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.








