கோலாலம்பூர், பிப்ரவரி.21-
வங்காளதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுள்ள நிலையில், அந்நாட்டுடன் இருதரப்பு உறவுகளை உயர்மட்ட அளவில் வலுப்படுத்த விரும்புவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நேற்று தாரிக்- உடனான தொலைப்பேசி உரையாடலில், அன்வார் அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், அமைதியான மற்றும் முறையான ஜனநாயக செயல்முறையை நிலைநிறுத்துவதில் வங்காளதேச மக்கள் காட்டிய முதிர்ச்சிக்கு, தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ள அன்வார், தாரிக்கை மலேசியாவிற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மலேசியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடையிலான நட்புறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும் அன்வார் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வங்காள தேசத்தின் தேசியவாதக் கட்சியான பிஎன்பி-யின் தலைவரான 60 வயதான தாரிக், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மகனாவார்.
கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிஎன்பி மகத்தான வெற்றியைப் பெற்றது.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி, தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்றார்.








