ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா நேரடியாகத் தொடங்கியுள்ள ராணுவ முற்றுகை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ராணுவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரானுக்கு வரிகள் செலுத்தி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அனைத்துலகக் கடற்பகுதிகளில் பயணிக்கும் கப்பல்களுக்கும் இந்த விதி பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகத்திற்குப் பயன்படும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதைத் தடுப்பதே அமெரிக்காவின் முதன்மை இலக்கு என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஈரான் அமைதியாக இருக்காது என்றும், பதில் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே பலவீனமாக உள்ள மத்திய கிழக்குச் சண்டை நிறுத்தம் எந்த நேரத்திலும் முறிந்து, போர் மூளும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், ஈரானுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்கள் மட்டுமே தங்களின் இலக்கு என்று அமெரிக்க ராணுவ மத்தியத் தளபத்தியம் தெளிவுபடுத்தியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் கரத்தை வலுப்படுத்துவதற்காகவும், உலகச் சந்தையில் எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகளைக் குறைப்பதற்காகவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இத்தகைய முற்றுகையைச் செயல்படுத்த அமெரிக்கா அதிகப்படியான போர்க்கப்பல்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியிருக்கும் என்றும், இது ஒரு போருக்கான அடையாளமாகவே பார்க்கப்படும் என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








