ஜோர்டான் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் பிராந்திய பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. தங்களது இறையாண்மையைத் தாக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் அண்டை நாடுகளின் எல்லைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு வளைகுடா நாடுகளுக்கு உண்டு என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலில் இருந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் தற்பொழுது கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், இந்த புதிய தாக்குதல்கள் அமைதி முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன. இந்த ஏவுகணைத் தாக்குதல்களின் போது, ஜோர்டானில் உள்ள அமெரிக்கக் கட்டளை மையம் மற்றும் எஃப்-35 போர் விமான தளங்கள் உட்பட நான்கு முக்கிய இலக்குகளைத் தாக்கி அழித்ததாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
எனினும், ஈரானில் இருந்து ஏவப்பட்ட 5 ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாகவும், இதனால் உயிரிழப்புகளோ அல்லது பொருள் சேதங்களோ ஏற்படவில்லை என்றும் ஜோர்டான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று, பஹ்ரைனும் பல வான்வழித் தாக்குதல்களைத் தடுத்து அழித்துள்ளதாகக் கூறியுள்ளது. வளைகுடாப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளிலும் இந்த மோதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.








