லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய குழுவினர் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் இன்று தெரிவித்தது. இந்தத் தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளில் வான் தாக்குதல் குறித்த எச்சரிக்கை அபாய சங்குகள் முழங்கின. இருப்பினும், ஹிஸ்புல்லா ஏவிய ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக ‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இஸ்ரேலின் வடக்குத் துறைமுக நகரான ஹைஃபா மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளைத் தான் குறிவைத்திருப்பதாக ஹிஸ்புல்லா அறிவித்திருந்தது. நேற்று மாலை வடக்கு இஸ்ரேலை நோக்கிச் செலுத்தப்பட்ட 10 உந்துகணைகளை ராணுவம் உடனடியாக முறியடித்த நிலையில், இன்று ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த புதன்கிழமை லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு தற்காலிக போர்நிறுத்த முயற்சி நிலவி வரும் சூழலில், இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளன








