தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா பல உறுப்புகளில் ஏற்பட்ட அடுத்தடுத்த தொற்று பாதிப்புகள் காரணமாக மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளார். அவரது இதயம் சீரற்ற முறையில் துடிப்பதைக் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் தீவிரமாகப் போராடி வருவதாக தாய்லாந்து அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், 47 வயதானவருமான இளவரசி பஜ்ரகிதியாபா, கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் இதய பாதிப்பு மற்றும் பிற தொற்று நோய்கள் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார். அன்று முதல் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஆழ்ந்த கோமா நிலையிலேயே இருந்து வருகிறார்.
தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இளவரசிக்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில் வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது குடலில் வீக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக அவரது இரத்த அழுத்தம் கடுமையாகக் குறைந்ததுடன், இதயத் துடிப்பும் சீரற்ற நிலையை அடைந்தது. அவரது நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டைத் தக்கவைப்பதற்காக மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து அடுத்தகட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








