அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டிருந்த தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா நேற்று இரவு ஈரானின் 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. மேலும், ஈரான் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதியையும் அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகள் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டின் போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானியத் தலைவர்களைக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். ஈரான் தொடர்ந்து பொய்களைக் கூறி வருவதாகவும், ஒப்பந்தத்தின் விதிகளுக்குப் புறம்பாக ஊடகங்களில் பேசி வருவதால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முற்றிலும் வீண் என்றும் அவர் குறிப்பிட்டார். டிரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உடனடியாக 5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.








