இணையதளங்களில் பரப்பப்படும் போலி மற்றும் திருத்தப்பட்ட தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தென் கொரியாவில் திருத்தப்பட்ட புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இப்புதிய சட்டத்தின் கீழ், இணையத்தில் சட்டவிரோதமான அல்லது போலியான தகவல்களை வேண்டுமென்றே பரப்புபவர்கள், அதனால் ஏற்படும் உண்மையான சேதத்தை விட ஐந்து மடங்கு வரை இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடலாம். மேலும், நீதிமன்றத்தால் சட்டவிரோதம் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட உள்ளடக்கங்களை மீண்டும் மீண்டும் பதிவிடும் குற்றவாளிகளுக்கு 1 பில்லியன் வான் சுமார் $655,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இதன் காரணமாக, தென் கொரியாவின் நேவர், காகாவோ மற்றும் அமெரிக்காவின் கூகுள், மெட்டா போன்ற முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள், பயனர்கள் இத்தகைய போலித் தகவல்களைப் புகாரளிப்பதற்கான புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், பெறப்பட்ட புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த வெளிப்படைத்தன்மை அறிக்கையை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை அவை வெளியிட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடந்த தோல்வியுற்ற இராணுவச் சட்ட முயற்சிக்குப் பிறகு, அங்கு போலித் தகவல்களின் புழக்கம் பெருமளவில் அதிகரித்தது இச்சட்டத் திருத்தத்திற்குக் முக்கியக் காரணமாக அமைந்தது. இருப்பினும், இச்சட்டம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கலாம் என்றும், அரசாங்கத்தின் தணிக்கை நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடக அமைப்புகள் தங்களது கவலைகளைத் தெரிவித்துள்ளன.








