குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் உட்பட 63 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குவைத் விமான நிலையத்தின் டி1 முனையம் பலத்த சேதமடைந்தது. இதன் காரணமாக அங்கு வணிக ரீதியிலான விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் மாற்று முனையம் வழியாகச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
தாக்குதலில் காயமடைந்த 63 பேருக்கும் எலும்பு முறிவு, தலைக்காயம் மற்றும் மூளையில் ரத்தக்கசிவு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்தை அடுத்து, குவைத் அரசு தனது நாட்டில் உள்ள இரண்டு ஈரான் தூதர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளதுடன், இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.








