டொரன்டோ: கனடாவில் வாழும் பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அங்கிருந்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் தனிநாடு கோரும் சீக்கிய பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியர்கள் உடனே கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என சீக்கிய பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப், ஹரியானாவில் சீக்கியர்கள் பகுதிகளை ஒருங்கிணைந்து தனி நாடு- காலிஸ்தான் அமைக்க வேண்டும் என சீக்கியர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் அழித்தொழிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவை விட்டு தப்பி ஓடும் சீக்கியர்கள் பல லட்சக்கணக்கானோர் கனடாவில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர். கனடாவின் மொத்த மக்கள் தொகையில் சீக்கியர்கள் தற்போது 2.1% என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கனடா அரசியலிலும் சீக்கியர்கள் பங்களிப்பு வலிமையாகிவிட்டது.
இந்நிலையில் இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகளை கனடா ஒப்படைக்காமல் துரோகம் செய்து வருகிறது. அதேநேரத்தில் தேடப்படும் பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டும் உள்ளனர். கனடாவில் நிகழ்ந்த இந்த கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்கிறது கனடா. இதனால் இந்திய தூதர அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்ற, இந்தியாவும் கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேற்றியது. இதனால் இரு நாடுகளிடையேயான உறவு சீர்குலைந்துவிட்டது.
மேலும் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்திருக்கிறது. இப்பின்னணியில் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு என்ற காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம், கனடா வாழ் பல லட்சம் இந்தியர்களை மிரட்டி இருக்கிறது.
இது தொடர்பாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் வெளியேறி இந்தியாவுக்கு செல்ல வேண்டும். நீங்கள் இந்தியாவை மட்டும் ஆதரிக்கவில்லை. காலிஸ்தான் தனிநாடு கோருகிறவர்கள் மீதான அடக்குமுறையையும் ஆதரிக்கிறீர்கள். ஆகையால் கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு செல்லுங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.