சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் எல்லைச் சோதனைச் சாவடியில், 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை கடத்த முயன்றதாகக் கூறப்படும் 22 வயதுடைய மலேசிய இளைஞர் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இது குறித்து சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, சந்தேக நபரின் கார் கூடுதல் சோதனைக்காக நிறுத்தப்பட்டபோது, அதன் பின்புறத்தில் இருந்த ஒரு பெட்டிக்குள் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் இரண்டு கட்டிகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விரிவான சோதனையில், காரின் பின்னால் இருந்து மொத்தமாக 8.6 கிலோ கஞ்சா மற்றும் 1.5 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 10.1 கிலோ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூரில் அமலில் உள்ள கடுமையான போதைப்பொருள் சட்டங்களின்படி, 500 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட கஞ்சா மற்றும் 250 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட மெத்தாம்பெட்டமைன் கடத்தியது நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.








