இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மலேசியா அதிகாரப்பூர்வமாக உதவ முன்வந்துள்ளது.
இதற்காக காட்டுத்தீயை வான்வழியாக அணைக்கும் திறன் கொண்ட போம்பார்டியர் இரக விமானம் உள்ளிட்ட உபகரணங்கள் அந்நாட்டிற்கு அனுப்பப்பட உள்ளன.
இது தொடர்பாக ஜகார்த்தாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி, இந்த உதவி தொடர்பான முன்மொழிவை, இந்தோனேசிய துணை அதிபர் ஜிப்ரான் ராகாபுமிங் ராக்காவிடம்முன்மொழிந்துள்ளார்.
மேலும், இந்த உதவியின் ஒரு பகுதியாக 3 ஹெலிகாப்டர்கள் மற்றும் 52 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்தோனேசியாவிற்கு அனுப்பப்பட உள்ளனர்.
இந்த குழுவில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் மற்றும் மலேசிய அரச விமானப்படையைச் சேர்ந்தவர்கள் இடம் பெறுகின்றனர்.
அதேவேளையில், இந்த உதவிக்கு இந்தோனேசிய அரசாங்கத்தின் ஒப்புதல் பெற, அந்நாட்டு அதிபர் பிரபாவோ சுபியந்தோவிடம் இந்த விவகாரம் கொண்டு செல்லப்படும் என்றும் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு தெற்கு சுமத்ராவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த போம்பார்டியர் இரக விமானம் பயன்படுத்தப்பட்டது.
அப்போது 5 நாட்கள் நடைபெற்ற நடவடிக்கையில், அந்த விமானம் 5 லட்சத்து 46 ஆயிரம் லிட்டர் தண்ணீரை வானிலிருந்து தெளித்தது குறிப்பிடத்தக்கது.








