ஜப்பானில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பதிவாகி வரும் தீவிர கோடை வெப்பம், தற்போது விலங்குகளின் உயிரையும் பறிக்கத் தொடங்கியுள்ளது. தோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற 'தாமா' மிருகக்காட்சிசாலையில், கடுமையான வெப்பத் தாக்குதல் காரணமாக மூன்று பெண் சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன.
உயிரிழந்த சிங்கங்களின் உடற்கூறு ஆய்வில், உடலில் கடுமையான நீரிழப்பு ஏற்பட்டு, உள் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததே மரணத்திற்கு காரணம் என அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். காடுகளின் ராஜாவான சிங்கங்களால், ஜப்பானின் தற்போதைய அதிக ஈரப்பதம் கலந்த கொளுத்தும் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போனதாக மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர். இதுமட்டுமின்றி, மேலும் இரண்டு ஆண் சிங்கங்களும், ஒரு பெண் சிங்கமும் தற்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன
விலங்குகளை மட்டுமின்றி மனிதர்களையும் வாட்டி வதைக்கும் இந்த கோடைக்காலத்தில், ஜப்பான் முழுவதும் இதுவரை 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெப்பத்தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலைமை மோசமடைந்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜப்பான் அரசு அவசர அறிவுறுத்தலை விடுத்துள்ளது.








