புதுடில்லி, பிப்ரவரி.08-
தம்முடைய மலேசியப் பயணம், மலேசியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் விரிவான வியூக கூட்டாண்மையை மேம்படுத்தும் என்றும், , பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள மோடி, தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, பிரதமர் மோடி கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பரில் மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்தார். பின்னர் 2018 மே 31 ஆம் தேதி மலேசியாவில் சில மணி நேரம் செலவிட்டார்.
தனது நண்பர் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், இந்தியாவுடன் ஆழமான மற்றும் விரிவான உறவுகளைக் கொண்ட மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்கிறேன் என்று மோடி குறிப்பிட்டார்.
மேலும், “மலேசியாவில் துடிப்பான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். கோலாலம்பூரில் நடைபெறும் சமூக நிகழ்ச்சியில் அவர்களைச் சந்தித்து கலந்துரையாட ஆவல்,” என்றும் மோடி கூறியுள்ளார்.








