கெடா, சுங்கை பட்டாணி பகுதியில் பல்வேறு பயங்கர குற்றங்களில் ஈடுபட்டு வந்த "கெங் ரமேஷ்" என்ற ஆபத்தான திட்டமிட்ட குற்ற கும்பலின் தலைவனை அரச மலேசிய போலீஸ் படை வெற்றிகரமாக கைது செய்துள்ளது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.
கடந்த மே 22ஆம் தேதி, தாய்லாந்து மற்றும் இந்திய நாட்டு போலீஸ் அதிகாரிகளின் ரகசிய ஒத்துழைப்போடு நடத்தப்பட்ட "ஒப் தீகா" என்ற அதிரடி வேட்டையின் மூலம் இந்த கைது நடவடிக்கை சாத்தியமானது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இந்தியாவின் ஹைதராபாத் நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் இந்த முக்கிய குற்றவாளி மடக்கிப் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் உடனடியாக மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டார் என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.
சுங்கை பட்டாணி நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் மற்றும் இன்டர்போலின் 'சிவப்பு நோட்டீஸ்' ஆகியவற்றின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கெடா, பாடாங் செராய் மற்றும் பீடோங் ஆகிய இடங்களில் நடந்த இரண்டு தனித்தனி கொடூர கொலை வழக்குகள் தொடர்பாகவும் இவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மிக ஆபத்தான் இந்த குற்றவாளியை பிடிக்க உதவிய இந்திய மற்றும் தாய்லாந்து அரசுக்கு மலேசிய போலீஸ் துறை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்வதாக டத்தோ குமார் தெரிவித்தார்.








